1852 நவம்பர் 18 குளிர்காலத்தில் ஒருநாள். மத்திய லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் ட்ரபல்கார் சதுக்கத்திலும் அதன் சுற்றுப்பிர தேசங்கள் முழுவதும் ஓயாத பெரும் வெள்ளம் போல் பெருந்திரளாக மக்கள் சென்று கொண்டி ருக்கிறார்கள். பிரதமர் வெலிங்டன் பிரபுவின் இறுதி அஞ்சலி ஊர்வலம் மணிக்கணக்காக நீண்டிருந்தது. கார்ல் மார்க்ஸின் குழந்தைகள் ஜென்னியையும் லாராவையும் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து மிகச் சிரமத்துடன் சாலையைக் கடக்கிறார் பிரடெரிக் ஏங்கெல்ஸ். பெரும் மக்கள் வெள்ளம் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது... எதிர்பாராமல் குழந்தைகள் கைவிட்டுச் சென்றுவிட்டார்கள். பதட்டமடைந்த ஏங்கெல்ஸ் குழந்தைகளைத் தேடுகிறார். என்ன சொல்லி மார்க்ஸை சமாதானப்படுத்துவது என்று பெருந்தவிப்புடன் தேடுகிறார். வழக்கம்போல் அன்றும் மார்க்ஸின் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டில் வேடிக்கையாகச் சுற்றித் திரியத்தான் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
லைப்ரி
என்ன செய்வதென்ற தவிப்புடன் நின்று கொண்டிருக்கும்போது தெருவின் ஓரத்தில் ஒரு கடையின் அருகிலிருந்து “லைப்ரரி..!” என்று அழைக்கும் மெல்லிய சப்தம் காதில் விழுகிறது. ஒரே குரலில் ஒலித்த குழந்தைகளின் குரல் கேட்டுப் பாசத்தவிப்புடன் அந்த இடத்திற்கு ஓடோடிச் சென்று மார்க்ஸின் குழந்தைகளை அரவணைத்து ஆரத்தழுவி அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார் ஏங்கெல்ஸ். மார்க்ஸின் வீட்டுக்குச் சென்றதும் குழந்தைகளுக்குக் குதூகல சந்தோஷம் பொங்கியது.
மார்க்ஸும் ஏங்கெல்ஸும் உயிரும் மெய்யும் போன்றவர்கள். மார்க்ஸின் குழந்தைகளுக்கு ஏங்கெல்ஸ் ஏராளமான கதைகள் சொல்லித்தருவார். அதனால் ஏங்கெல்ஸை “லைப்ரரி” என்று குழந்தைகள் செல்லமாக அழைப்பார்கள்! - அதாவது, ‘நூலகம்’ என்று அழைப்பார்கள்! ஏங்கெல்ஸை ஓர் அறிவுக் களஞ்சியம் என்றே மார்க்ஸின் குழந்தைகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு குடும்ப நண்பர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், மனிதருடனான நட்பு எந்த அளவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதையும் ஏங்கெல்ஸ் தமது வாழ்க்கை மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார்.
ஆருயிர்த் தோழர் மார்க்ஸுடன் இணைந்து, மனிதகுலத்தின் வளர்ச்சி விதிகளைக் கண்டுபிடித்தும், அதன் மூலம் இந்த உலகையே ஒரு பொன்னுலகமாகப் படைப்பதற்கான தத்துவத்தையும் நடைமுறையையும் வழங்கிய மகானாகிய பிரடெரிக் ஏங்கெல்ஸின் நினைவு நாள் ஆகஸ்ட் 5ஆம் தேதி. கார்ல் மார்க்ஸின் வரலாறும் ஏங்கெல்ஸின் வரலாறும் ஒன்றிணைந்த நாள்முதல் இருவரும் பொது இலட்சியத்திற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர்.
அசாதாரண திறமை
1820 நவம்பர் 28 அன்று ஜெர்மனியின் பார்மென் நகரில் ஒரு நெசவாலைத் தொழிலதிபரின் குடும்பத்தில் ஏங்கெல்ஸ் பிறந்தார். தந்தையின் பெயரும் பிரடெரிக் ஏங்கெல்ஸ்தான். தாயார் பெயர் எலிஸபத். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடிப்பதற்கு முன்பே தந்தையின் நிர்பந்தத்திற்கு இசைந்து அவரது நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார் ஏங்கெல்ஸ். ஜெர்மன் தத்துவ ஞானியாகிய ஹெகலின் ஆதரவாளர்களின் ‘இளைய ஹெகலியன் கிளப்’பில் சேர்ந்து அந்தக் கிளப் உறுப்பினர்களின் கவனத்திற்குரியவரானார். இளமையிலேயே அசாதாரண திறமையை வெளிப்படுத்திய ஏங்கெல்ஸ் கலையிலும் இசையிலும் தத்துவச் சிந்தனையிலும் மொழிகளைக் கற்பதிலும் கவிதை படைப்பதிலும் கார்ட்டூன் சித்திரங்கள் வரைவதிலும் திறமை மிக்கவராக விளங்கினார். இவை மட்டுமல்ல, வாள் சுழற்றும் பயிற்சி, குதிரை சவாரி, நீச்சல் ஆகிய விளையாட்டுகளெல்லாம் ஏங்கெல்ஸ்க்கு விருப்பமானவை. அத்துடன் உடற்பயிற்சியும் உண்டு. இளைமைக் காலத்திலேயே ‘ஜெர்மன் டெலிகிராப்’ பத்திரிகையில் உத்வேகமான கருத்துக்கள் கொண்ட தொடர் கட்டுரைகளும் எழுதினார்.
1841-இல் இராணுவ சேவையில் சேர்ந்தார். விடுமுறை சமயத்தில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் பகுதிநேர மாணவராகச் சேர்ந்தார். தத்துவ இயலில் தீவிர கவனம் செலுத்தினார். ஜெர்மன் அரசாங்கத்தின் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகக் கூர்மையான விவாதங்களில் ஈடுபட்டார். 1842-இல் இராணுவ சேவையைப் பூர்த்திசெய்து பெர்லினுக்குத் திரும்பி வந்தபோது மான்செஸ்ட்டரில் ‘எர்மென் அண்டு ஏங்கெல்ஸ்’ துணி ஆலையில் வர்த்தகப் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்குச் செல்லுமாறு தந்தை கட்டாயப்படுத்தினார். தொழில் முதலாளிகளின் நாடாக மாறிக் கொண்டிருக்கிற இங்கிலாந்திலும், விவசாய நாடாக இருக்கும் ஜெர்மனியிலும் உள்ள நிலைமைகளை ஏங்கெல்ஸ் விரிவாகக் கற்றார். “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்கிற கட்டுரையொன்றை எழுதி வெளியிட்டார். ஏங்கெல்ஸிடம் ஒருவர் கேட்டார்: “இங்கிலாந்தில் ஆட்சி நடத்துவது யார்?” அதற்கு ஏங்கெல்ஸ் அளித்த பதில்: “சொத்து படைத்த முதலாளிகள்.”
ஏங்கெல்ஸ் சாசன இயக்கத்தின் கூட்டங்களிலும் மாநாட்டிலும் பங்கேற்றார்; பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார்; அந்த இயக்கத்தின் இடதுசாரித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டார். கற்பனாவாத சோஷலிஸ்டாகிய ராபர்ட் ஓவனின் அனுதாபிகளுடனும் நட்புவைத்துக் கொண்டார்; ‘தி நியூ மாரல் வேல்டு’ என்கிற பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார்.
இதயத்தைத் தொடும் நட்பு
வணிகவியல் படிப்புக்குப் பிறகு 1844-இல் ஜெர்மனிப் பயணத்தின்போது மார்க்ஸுடன் 10 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது இருவருக்குமிடையேயான சந்திப்புப் பற்றி லெனின் இவ்வாறு எழுதினார்: “ இதயத்தைத் தொடும் நட்பின் காட்சிகளை விவரிக்கிற பல இதிகாசங்கள் உண்டு. அவையெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் ஒருவருக்கொருவர் உறவை வெளிப்படுத்தும் பேரறிஞர்களாகவும் போராளிகளாகவும் உள்ள இந்த இருவர்தான் தங்களுக்கான தத்துவத்தைப் படைத்தார்கள் என்று உலகத் தொழிலாளி வர்க்கத்தால் சொல்ல முடியும்.”
1845-46இல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் சேர்ந்து “புனிதக் குடும்பம்”, “ஜெர்மன் தத்துவ இயல்” ஆகிய நூல்கள் படைத்தனர். 1847-இல் லண்டனில் நடைபெற்ற முற்போக்காளர்களின் “லீக் ஆஃப் த ஜஸ்டிஸ்”-அமைப்பின் மாநாட்டில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பங்கேற்றனர். இந்த நீதிமான்களின் கூட்டணிதான் பிறகு “கம்யூனிஸ்ட் லீக்”என மாறியது. 1847-இல் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் அதன் திட்டம் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பை ஏற்று அவர்கள் திட்டம் அறிக்கையைத் தயாரித்தனர். அதுதான் உலகம் முழுவதும் அறியப்படும் பெரும் புகழ்பெற்ற “கம்யூனிஸ்ட் அறிக்கை”.
பன்மொழிகள் கற்ற ஏங்கெல்ஸ்
மார்க்ஸின் தந்தை தமது சொத்தை விற்றுத் தந்த பணத்தை வைத்து கட்சியின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையை ஆரம்பித்தார் மார்க்ஸ். இந்தப் பத்திரிகையின் சக ஆசிரியராக இருந்தார் ஏங்கெல்ஸ். ஏங்கெல்ஸுக்கு இருபது மொழிகள் தெரியும். பன்மொழிப் புலமை பெற்றவர். மார்க்ஸுக்கும் அவரது குடும்பத்திற்கும் உதவுவதில் பெரும் விருப்பமுள்ளவர் ஏங்கெல்ஸ். மார்க்ஸும் அவரது மனைவியும் குழந்தைகளும் பட்டினியிலும் நோயிலும் கஷ்டப்படும்போதெல்லாம் ஏங்கெல்ஸ் உடன் உதவிசெய்வார்.
உலகப் புகழ் ‘மூலதனம்’ நூல்
உலகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அறிவுக் களஞ்சியமாகிய - ஞானச் சுடராகிய மார்க்ஸின் “மூலதனம்” நூல் முதலாவது தொகுதி மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்திலேயே வெளியிடப்பட்டது. மூலதனம் நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை மார்க்ஸ் மறைந்ததற்குப் பின்னர் ஏங்கெல்ஸ் செப்பனிட்டு வெளியிட்டர். 1895 ஆகஸ்ட் 5 அன்று ஏங்கெல்ஸ் காலமானார்.
மார்க்ஸியத் தத்துவம் யுகம்யுகங்களாக காலத்தை வென்று நீடித்திருக்குமென்கிற ஏங்கெல்ஸின் சொல் மெய்யாகும். கடந்த 125 ஆண்டுகளில் மார்க்சிஸம் என்கிற இயக்கவியல் தத்துவம் உலகில் செல்வாக்குச் செலுத்தாத துறைகளே இல்லை. ஏகாதிபத்திய அரசுகளும், கார்ப்பரேட் கோடீஸ்வரக் கோமான்களும், அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்பவர்களும் மேலும் மேலும் நெருக்கடியில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களைப் பாதித்துக் கொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முதலாளித்துவம் தப்பித்துக் கொள்ள வழி தேடி அலைவதையும் நாம் இந்த ஏங்கெல்ஸ் தினத்தில் மறக்க இயலாது. மார்க்சியத் தத்துவத்தைத் தகர்ப்பதற்குப் பொய்க் கதைகளையும் அவதூறுகளையும் பரப்பும் சதிமுயற்சிகளில் இருநூறு ஆண்டுகளாக முதலாளித்துவமும் மதவாதச் சக்திகளும் ஈடுபடுகின்றன. இதற்கு எதிரான முன்னெச்சரிக்கையையும் விழிப்புணர்வையுமே இன்று உலகம் கோருகிறது.
நன்றி: தேசாபிமானி நாளிதழ்
தமிழில்: தி.வரதராசன்